கட்டாய ஹெல்மட் சட்டம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? போக்குவரத்து இணை ஆணையர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டாய ஹெல்மட் சட்டம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? போக்குவரத்து இணை ஆணையர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கட்டாய ஹெல்மெட் விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து சென்னை போக்குவரத்து காவல் இணை மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை என்பதால், அதை முழுமையாக அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூர் கே.கே.ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, 2015 கட்டாய ஹெல்மெட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த மூன்றாண்டுகளாக எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த பைக் ரேஸில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்துள்ளதாகவும், அதிலும் வாகனத்தை ஓட்டியவர் ஹெல்மெட் அணியவில்லை என்பதை சுட்டிக்காட்டியும் வேதனை தெரிவித்தனர்.

அதற்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் பைக் ரேஸைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கட்டாய ஹெல்மெட் விதிகளை அமல்படுத்த காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து ஜூன் 6-ம் தேதி சென்னை போக்குவரத்து காவல்துறையின் இணை மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in