நீதிமன்றம் குறித்து விமர்சனம்: பதில் அளிக்க சி.ஆர்.சரஸ்வதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்

நீதிமன்றம் குறித்து விமர்சனம்: பதில் அளிக்க சி.ஆர்.சரஸ்வதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்
Updated on
1 min read

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.

 தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி, 18 எம்.எல்.ஏ க்கள் வழக்கில் ஒன்றரை வருடம் கழித்து தீர்ப்பு வழங்க எதற்கு நீதிமன்றம் எனவும், 11 எம்.எல்.ஏ க்கள்  வழக்கில் இன்னும் தீர்ப்பே வழங்காத போது பின்னர் எதற்கு நீதிமன்றம் என்பதுபோன்ற மிகவும் தரக்குறைவான விமர்சனங்களை  முன்வைத்ததாகக் கூறி, சி.ஆர்.சரஸ்வதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி அரசு தலைமை வழக்கறிஞரிடம் கடந்த மே மாதம் மனு அளித்திருந்தார்.

நீதித் துறையின் மீது களங்கம் கற்பிக்க முயன்றதோடு, நீதிமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்த சி.ஆர் சரஸ்வதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மனு குறித்து ஜூன் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க சி.ஆர். சரஸ்வதிக்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in