Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இதில் ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சகத்தில் 9-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழுவை சேர்ந்த சுப்பிரமணியம், பட்டாபிராமன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழக அதிகாரிகள், “காவிரி மேலாண்மை ஆணையம் ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் 1.7 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தினர்.
கர்நாடகா அரசு தரப்பில், “தென்மேற்கு பருவ மழை தாமதமாகியுள்ளதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது” என விளக்கம் அளிக்கப்பட்டது. இதே போல கேரளா, புதுச்சேரி அரசுகளும் காவிரி நீர் பங்கீடு தொடர்பான கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக முன் வைத்தனர்.
இதன் பின்னர் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 25-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT