Last Updated : 02 Jun, 2019 12:00 AM

 

Published : 02 Jun 2019 12:00 AM
Last Updated : 02 Jun 2019 12:00 AM

அரசுப் பள்ளிகளில் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் எண்ணங்களை வண்ணமயமாக்கும் பணி: தனியொரு ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்

காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் கற்றலை மேம்படுத்தும் நோக்கிலும், மாணவர் சேர்க் கையை அதிகப்படுத்தும் வகையிலும் சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டி அழகுபடுத்தும் பணியை அரசுப் பள்ளி ஆசிரியர் தனியொருவராக மேற்கொண்டு வருகிறார்.

காரைக்கால் மாவட்டம் பண்டாரவாடை அரசுத் தொடக்கப் பள்ளியில் பொறுப்பாசிரியராக பணிபுரிபவர் எம்.செல்வராஜ். இவர் ஓவியம் தீட்டுவதிலும், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைகள் மூலம் மாணவர்களிடையே கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்வதிலும் ஆர்வமுடைய வர். இவர் முன்பு பணியாற்றிய அகளங்கண் அரசு தொடக்கப் பள்ளியிலும், தற்போது பணியாற் றும் பள்ளியிலும் தனது சொந்த ஆர்வத்தின் அடிப்படையில் வகுப்பறைகள், பள்ளி சுற்றுச் சுவர் உள்ளிட்ட இடங்களில் பாடங்களோடு தொடர்புடைய வண்ணமயமான ஓவியங்களைத் தீட்டியுள்ளார். இது அப்போதே பலரின் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த கோடை விடுமுறையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளிலும் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார். இதுவரை தக்களூர், புதுத்துறை, அம்பகரத்தூர், சுப்பராயபுரம், கீழக் காசாக்குடிமேடு, முப்பைத்தங்குடி, காரைக்கால் நேரு நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளிகள், புதுத்துறை, திருநள்ளாறு பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள், சேத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ஓவியம் தீட்டும் பணியை முடித்துள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் எம்.செல்வராஜ் கூறியது: அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கில், நான் பணியாற்றிய பள்ளியில், பாடத்தோடு தொடர்புடைய ஓவியங் களையும், கதைகள் சொல்லும் ஓவியங்களையும் வரைந்தேன். இது மாணவர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. பள்ளியும் அழகாக காட்சியளித்தது.

ஒரு முறை பள்ளிக்கு வந்த புதுச்சேரி கல்வியமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், இந்தப் பணியை பார்த்து பாராட்டினார். இதனால், மாவட்டத்தில் உள்ள மற்ற அரசுப் பள்ளிகளிலும் இப்பணியை செய்ய வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. அதன்படி, சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் இப்பணியை செய்யத் தொடங்கினேன். இந்த கோடை விடுமுறையிலும் இப் பணியை மேற்கொண்டேன். இதுவரை 10 பள்ளிகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகளில் பாடத்தோடு தொடர்புடைய படங்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட ஓவியங்களும், சுற்றுச் சுவர்களில் படத்தைப் பார்த்து மாணவர்கள் கதை சொல்லும் வகையிலான ஓவியங்களும் வரையப்படுகின்றன.

பள்ளி நிர்வாகத்தினர் பெயின்ட் வாங்கி கொடுத்து விடுவார்கள். தொகை எதுவும் பெற்றுக் கொள்ளாமல் ஓவியம் வரைந்து கொடுப்பேன்.

பள்ளிகளில் வண்ணம் பூச ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே அரசு அனுமதிக்கிறது. ஆனால், பள்ளி முழுவதும் ஓவியம் தீட்டி வண்ணமயமாக்க பெயின்டர்கள் ரூ.60 ஆயிரம் கேட்கிறார்கள். ஆனால் எனக்கு வாங்கித் தரும் பெயின்ட் செலவு அதிகபட்சம் ரூ.2,500 மட்டுமே. இதனால், இன்னும் பல பள்ளிகளிலிருந்தும் அழைப்பு விடுத்துள்ளனர். தமிழகப் பகுதிகளிலிருந்தும் அழைப்பு வருகிறது. இது எனக்கு முழு மனநிறைவை தருகிறது. பள்ளியின் தோற்றம் தனியார் பள்ளிக்கு இணையாக இருக்கிறது. சேர்க்கையும் அதிகமாகிறது என பலரும் தெரிவிப்பதாகக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x