Published : 05 Jun 2019 07:29 PM
Last Updated : 05 Jun 2019 07:29 PM
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து தமிழக எல்லைக்கு வரும் வாகனங்கள் மருத்துவக்குழு மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த ஆண்டு ‘நிபா’ என்ற கொடிய வைரஸ் காய்ச்சலால் 17 பேர் பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு இந்த காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் கொச்சி தனியார் மருத்துவமனையில் காய்சலுக்கு அனுமதிக்கப்பட்ட இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த கல்லூரி மாணவருக்கு நிபாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இடுக்கி மாவட்டம் தேனிக்கு அருகில் அமைந்துள்ளதால் அங்கிருந்து நோய் பாதிக்கப்பட்டவர்கள் வருவதைக் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக தமிழக எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு, லோயர்கேம்ப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கம்பம் மெட்டு பழைய போலீஸ் சோதனைச்சாவடி பகுதியில் சுகாதார ஆய்வாளர் பாபுராஜா தலைமையிலும், லோயர்கேம்ப் பஸ்டாண்டு பகுதியில் கூடலூர் சுகாதார ஆய்வாளர் சரவணன் தலைமையிலும் மருத்துவக்குழுவினர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவக்குழுவினர் சோதனை செய்து வருகின்றனர். பேருந்தில் ஏறி பயணிகளுக்கு காய்ச்சல் எதுவும் உள்ளதா என்று கேட்டு நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பாதிப்புகளின் தன்மையைப் பொறுத்து சில நாட்களில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது..
இருப்பினும் தமிழகத்தில் நிபா வைரஸ் பற்றிய அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இடுக்கி மாவட்டம் தமிழக எல்லைப்பகுதி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று குழுவினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT