Published : 12 Jun 2019 01:09 PM
Last Updated : 12 Jun 2019 01:09 PM

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிட உறுதி; பாஜக வெற்றிக்கு மகிழ்ச்சி; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள்

விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, வெற்றி பெற்றிட உறுதி ஏற்று, அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சரகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் - 1

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், அதிமுக வேட்பாளர்களுக்கும், கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் - 2

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுகவின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பணியாற்றிய நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் ஆதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் - 3

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கும் பாஜக, இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் - 4

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, ஜெயலலிதாவின் தலைமையில் பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றியைப் பெற்றிட உறுதி ஏற்றும், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் - 5

எம்ஜிஆரின் வழியில் அரசியல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும், ஜெயலலிதாவின் பணிகளை மேற்கொள்ள்ளும் வண்ணம் உறுதி ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x