

'பிக் பாஸ்-3' நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
பிரபலங்களை வீட்டுக்குள் அடைத்து வைத்து நூறு நாட்கள் 60 கேமராக்கள் முன் அவர்களது நடத்தையை ரசிகர்கள் காணும் வகையில் நடக்கும் ரியாலிட்டிஷோ உலகம் முழுவதும் பிரபலமானது.
இந்தியில் பல மொழிகளில் பிரபலமாக ஆண்டுக்கணக்கில் நடத்தப்பட்டுவரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி, தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு தற்போது 3-வது சீசன் வரும் ஞாயிற்றுகிழமை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்..
அவரது மனுவில், '' 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து வருகின்றனர். இரட்டை அர்த்தமுடைய வசனங்கள் பேசப்படுகின்றன. இது இளைஞர்களையும், பார்வையாளர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது.
எனவே இந்தியன் பிராட்காஸ்ட் பவுண்டேசனின் (IBF) தணிக்கைச் சான்று பெறாமல் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.