Published : 19 Jun 2019 07:32 PM
Last Updated : 19 Jun 2019 07:32 PM

ஸ்டாலினுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு: அமைச்சர் வேலுமணி திரும்பப் பெற்றார்

உள்ளாட்சித் துறை முறைகேடுகளில் தனக்குத் தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவதற்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திரும்பப் பெற்றார்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்புப் பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்குவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளிள் அதிக ஊழல் நடந்து இருப்பதால் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும் என்றும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

ஸ்டாலின் பேசியதை எதிர்த்து, ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனுத்தாக்கல் செய்திருந்தார். தன்னைப் பற்றிப் பேச ஸ்டாலினுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் நடந்து வந்தது. இந்த வழக்கில் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஸ்டாலின் பேச தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தன்னைப் பற்றிப் பேச ஸ்டாலினுக்குத் தடை விதிக்கக் கோரிய இடைக்கால மனுவை மட்டும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுப்ரமணியன், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய பிரதான மனு மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்ததுடன், பேசத் தடை கோரிய இடைக்கால மனுவை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x