Published : 12 Jun 2019 02:19 PM
Last Updated : 12 Jun 2019 02:19 PM
அதிமுகவினர் ஊடகங்களில் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
தலைமைக் கழகத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை, அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், ஊடகங்களுக்கு எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"அதிமுக விவகாரங்கள், உட்கட்சிப் பிரச்சினைகள் குறித்து பொதுவெளியில் பேசுவது சரியாக இருக்காது என்ற அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை சிலர் வேண்டுமென்றே பொதுவெளியில் கூறுகின்றனர். அவை அவதூறுகளைப் பரப்புகின்ற விதத்தில் அமைந்துவிடக் கூடாது. கட்சி கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும், ஒற்றுமையுடனும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
தேர்தலில் வெற்றி - தோல்வி இயல்பானதுதான். வெற்றி பெற்றால் ஒரு மாதிரியான கருத்துகளையும், தோல்வியடைந்தால் வேறு மாதிரியான கருத்துகளையும் சொல்வதும் சரியாக இருக்காது. அதிமுக எப்போதும் மக்கள் பணி செய்கின்ற இயக்கம் என்பதன் அடிப்படையிலும், மேலும் பல யூகங்களை முன்வைத்து அதுகுறித்த பேட்டிகள், விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என வைகைச்செல்வன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்து எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த வைகைச்செல்வன், "அதுகுறித்து நான் வெளியில் எதுவும் சொல்ல முடியாது. அதுகுறித்த பதில் எனக்குத் தெரிந்தாலும், கட்சியின் கட்டுப்பாடுகளைக் கருதி வெளியில் சொல்ல முடியாது. தவிர, ஒற்றைத் தலைமையா இரட்டைத் தலைமையா என்ற விவாதமே எழவில்லை.
இரட்டைத் தலைமையுடன் அதிமுக நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை மீட்ட இந்த இரட்டைத் தலைமையே தொடர்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் இருக்கின்றன" என வைகைச்செல்வன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT