Published : 09 Jun 2019 04:22 PM
Last Updated : 09 Jun 2019 04:22 PM

குடும்பத்திற்காக சிலர் அதிமுகவை மிரட்டினால் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்: அதிமுக எம்எல்ஏ ஆவேசம்

தனது குடும்பத்திற்காக அதிமுகவை யார் மிரட்டினாலும் சரி, பிளவுப்படுத்த எண்ணினாலும் சரி, அவர்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமசந்திரன் கூறியுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நேற்று பரபரப்பு பேட்டியளித்தார். அப்போது, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும், அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை,ஆளுமை திறனுடைய தலைவர் வேண்டும் எனக் கூறினார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான.ராமச்சந்திரன் வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். அதில் ‘‘அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கூறியுள்ள கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. அவர் சொல்வது போல் ஒற்றை தலைமையும் வலிமையான தலைமையாக சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்களது குடும்பத்தை ஒதுக்கி வைத்து கட்சியே குடும்பம் என காத்திட்டனர். அதிமுகவை யார் தனது குடும்பத்திற்காக மிரட்டினாலும் சரி, பிளவுப்படுத்த எண்ணினாலும் சரி, அவர்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.தங்களது குடும்பத்திற்காக கட்சியை வளைக்க நினைப்பது வேதனை அளிக்கிறது’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x