Published : 02 Jun 2019 01:04 PM
Last Updated : 02 Jun 2019 01:04 PM

மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கிறது தேமுதிக : ஆய்வு தொடங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்

விஜயகாந்த்தின் தேமுதிக மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய்யுள்ளன.

 

மாநில கட்சி என்ற அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 6 சதவீத வாக்குகளை ஒரு கட்சி பெற வேண்டும். இதோடு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதும் விதிமுறையாக உள்ளது.  3 தொடர்ச்சியான தேர்தல்களில் ஒரு எம்.பி. அல்லது ஒரு எம்.எல்.ஏ.வைக் கூட தேமுதிக பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே தனித்துப் போட்டியிட்ட தேமுதிக சட்டப்பேரவைத் தேர்தலில் 8.38% வாக்குகளைப் பெற்று முத்திரை பதித்தது. அதற்கு அடுத்து 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 10.3% வாக்குகளைப் பெற்றது.

 

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 7.88% வாக்குகளைப் பெற்றது.  இது படிப்படியாகக் குறைந்து 2014 லோக்சபா தேர்தலில் 5.19% ஆகவும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 2.30% ஆகவும் 2019 லோக்சபா தேர்தலில் 2.19% ஆகவும் குறைந்தது. தொடர்ந்து 2வது முறையாக 3 சதவீதத்திற்கும் குறைவாக வாக்குகளைப் பெற்றது தேமுதிக. இதனால் அதன் மாநில கட்சி அந்தஸ்து சிக்கலாகியுள்ளது.

 

இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ள தமிழக தேர்தல் ஆணையம் விரைவில் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் மாநில கட்சி தகுதி நீக்கம் பெற்றால் அக்கட்சியின் முரசு சின்னமும் பறிபோகும் நிலை உள்ளது.

 

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து 29 தொகுதிகளில் வென்றதையடுத்து மாநில கட்சி என்ற அங்கீகாரம் பெற்றது தேமுதிக என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x