Published : 07 Jun 2019 05:33 PM
Last Updated : 07 Jun 2019 05:33 PM

கேரள எல்லையான போடி முந்தலில் நிபா வைரஸ் மருத்துவ பரிசோதனை முகாம்

கேரள எல்லையான போடி முந்தல் பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு நிபா வைரஸ் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரளாவின் சில பகுதிகளில் நிபா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்பாதிப்பு தமிழகத்திற்கு பரவாத வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக கேரள நுழைவுப் பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு நிபா வைரஸ் தாக்குதல் உள்ளதா என்று மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்த ஆட்சியர் ம.பல்லவிபல் தேவ் கூறுகையில், வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளவால்கள் கடித்த பழங்கள், பன்றிகள் மூலம் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை.

காய்ச்சல், தொண்டைப்புண், தசைவலி ஆகியவை ஆரம்பநிலை அறிகுறிகளாகும். வாந்தி, வயிற்றுப்போக்கு, கல்லீரல் செயலிழப்பு, காது, மூக்கில் ரத்தம் வருதல் தீவிரநிலை அறிகுறிகளாகும்.

எனவே பொதுமக்கள் கைகளை கழுவியும், பழங்களை சுத்தமான நீரில் கழுவியும் உண்ண வேண்டும் என்றார்.

ஆய்வின் போது சுகாதாரப்பணிகளின் துணைஇயக்குநர் வரதராஜன் உட்பட பலர் இருந்தனர்.

தொடர்ந்து கேரளப் பகுதியில் இருந்து வந்த வாகனங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x