

கர்நாடகா, கேரளாவில் பரவலாக மழை பெய்து வருவதால், அந்த மாநில காடுகளில் தமிழக யானைகள் வலசை சென்றுள்ளன.
தமிழக காடுகளில் 3,750 யானைகள் வசிக்கின்றன. காடுகளில் வளரும் மூங்கில், ஆலமரம், நாவல் உள்ளிட்ட மரக்கிளைகளை யானைகள் விரும்பி சாப்பிடுகின்றன. கடந்த 10 ஆண்டு களாக தமிழக காடுகளில் வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழை சராசரி மழையளவு குறைந்துவிட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக முற்றிலும் மழை பெய்யவில்லை. காடுகளில் யானைகள் விரும்பி சாப்பிடும் மரங்கள், செடி, கொடிகள் கருகி சருகாகி அழிந்துவிட்டன. அதனால் ஈரோடு, கோவை, திண்டுக்கல் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் யானைகள் காடுகளைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளையொட்டிய விவசாயத் தோட்டங்கள், நீர் நிலைகளை நோக்கி படை யெடுக்கத் தொடங்கின.
இடம் பெயர்ந்த யானைகள்
ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை யானைகள் இடம்பெயர்ச்சி அதிக அளவு நடைபெறும். இந்தக் காலக்கட்டத்தில் கேரளா, கர்நாடகாவில் மழை பெய்யும் என்பதால் யானைகள் அந்த மாநிலங்களுக்குச் சென்று விடுகின்றன. கடந்த ஆறு மாதமாக கேரளா, கர்நாடகாவில் மழை பெய்துள்ளது. அதனால், தமிழக யானைகள் தற்போது கர்நாடகா, கேரளாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டன. திண்டுக்கல் மாவட்ட யானைகள், கேரளா மாநிலம் பெரியாறு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள மூணாறு பகுதிக்குச் சென்றுவிட்டன.
தற்காலிக அகழி, மின்சார வேலி
தமிழ்நாடு வனத்துறை யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழை வதைத் தடுக்க தற்காலிகமாக காடுகளைச் சுற்றிலும் அகழிகளை வெட்டியுள்ளது. சூரிய ஒளி மின்சார வேலிகளையும் அமைத்தது. ஆனாலும், யானைகள் வெளியேறு வதைத் தடுக்க முடியவில்லை. யானைகள் மூலம் மனித உயிரிழப்பு, விவசாயப் பயிர் சேதம் அதிகரித்தது.
இதையடுத்து, யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க தமிழக வனத்துறை சார்பில் ‘வனவிலங்குகள் தீவனப்பயிர் வளர்ப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டது. அதன்படி காடு களில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய, யானைகள் விரும்பி சாப்பிடும் மூங்கில், ஆலமரம், புங்கன், நாவல் மரங்களை நட்டு வருகிறது. நடப் பாண்டு தருமபுரி, தேனி, கிருஷ்ண கிரி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட யானைகள் நடமாட்டம் மிகுந்த மாவட்டங்களில் 10,000 முதல் 8 ஆயிரம் வரையிலான மரக் கன்றுகள் வீதம் காடுகளில் 5 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
யானைகள் இடப்பெயர்ச்சி குறித்து யானை ஆராய்ச்சியாளர்கள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: “யானைகள் இடப்பெயர்ச்சி என்பது இயல்பானது. யானைகள் எப்போதுமே அதன் உணவுத் தேவைக்காக இடம் பெயர்ந்துக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. அவை ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட மாதங் களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இடம் பெயரும். இதனை வலசை என்று அழைப்பார்கள். இது பல்லா யிரம் ஆண்டுகளாக யானைகளின் மரபிலேயே பதிவான ஒன்று. அதன் படி தற்போது அவை மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான பகுதி களில் அமைந்துள்ள கேரளாவின் வயநாடு, பெரியாறு புலிகள் காப்பகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வலசை சென்றுள்ளன. சில மாதங்களில் அவை மீண்டும் தமிழகத்துக்கு வந்துவிடும்” என்றனர்.