

'பஸ் டே' கொண்டாடி பொதுமக்களுக்கு இடையூறாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியதாகவும் போலீஸார் தொடர்ந்த வழக்கில் 9 கல்லூரி மாணவர்களை பச்சையப்பன் கல்லூரி இடைநீக்கம் செய்துள்ளது.
சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக்கல்லூரி, தியாகராயா கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் சிலர் ஆண்டுக்கணக்காக ரூட்டுகளில் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும்போது மோதிக்கொள்வார்கள்.
'பஸ் டே' என்கிற பெயரில் கொண்டாட்டங்களைக் கொண்டாடி பேருந்து மீது ஏறி ஆட்டம் போடுவார்கள். இதனால் மாணவர்களுக்குள் மோதல் வந்து தாக்கிக்கொண்ட சம்பவங்கள், கல்லெறி சம்பவங்களால் பயணிகள் காயமடைந்தது, ஆயுதங்களால் வெட்டிக்கொண்டது என தொடர்கதையானது.
இது தவிர பேருந்து மீதேறி ஊர்வலம் போவதும் அதன் காரணமாக பேருந்து மெதுவாகச் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் சென்னையில் பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்நிலையில் சென்னை போலீஸார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்தனர்.
கல்லூரி தரப்பு, மாணவர் தரப்பு, காவல் அதிகாரிகள் என முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடந்தது. 'பஸ் டே' கொண்டாடினாலோ, ஆயுதத்துடன் வந்தாலோ கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் ஆண்டுதோறும் மாணவர்கள் அதை மீறுவதும் போலீஸார் நடவடிக்கை எடுப்பதும் தொடர்கிறது.
நேற்று முன்தினம் சென்னையில் உள்ள கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின் திறக்கப்பட்டன. கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே 'பஸ் டே' கொண்டாடினர். பேருந்தின் மீதேறி ஆட்டம் போட்டனர். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று மாணவர்களைப் பிடித்தனர்.
ஷெனாய் நகரில் உள்ள புல்லா அவின்யூ அருகே உள்ள பார்க்கிலிருந்து சென்னை மாநகராட்சி பேருந்தை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி 'பஸ் டே' கொண்டாடினர்.
50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மேல் பகுதியில் நின்றுகொண்டு கூச்சலிட்டுக் கொண்டும் மீதி உள்ள நபர்கள் பேருந்தில் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு தொங்கியபடியும் வந்தனர். இதனால் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.
ஒருகட்டத்தில் பேருந்து திடீரென பிரேக் போட மேலே நின்றிருந்தவர்கள் சீட்டுக்கட்டு சரிவதுபோன்று கீழே விழுந்தனர். இதையடுத்து அமைந்தக்கரை காவல் ஆய்வாளர் பெருந்துறை முருகன் அங்கு விரைந்து வந்து மாணவர்களை கலைந்து போகச்செய்தார். இதில் 13 மாணவர்கள் சிக்கினர்.
நியூ ஆவடி சாலையில் 'பஸ் டே' கொண்டாடி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த மாணவர்களில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 'பஸ் டே' கொண்டாடிய 24 பேரை அன்று போலீஸார் பிடித்தனர்.
இதில் பச்சையப்பன் கல்லூரி இளநிலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு மாணவர்களான, மதுரவாயல் கங்கையம்மன் நகரைச் சேர்ந்த பிரகாஷ், மணிகண்டன், அமப்த்தூர் சென்னீர்குப்பம் பரணிதரன், மதுரவாயல் அபிராமபுரம் விக்னேஷ், அரும்பாக்கம் கல்கி நகர் மகேஷ், பூந்தமல்லி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நரேந்திரன், மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி மணிகண்டன், பூந்தமல்லி வெற்றிலைத்தோட்டம் ராகேஷ், பூந்தமல்லி தெற்கு கூத்தம்பாக்கம் சுந்தரேசன், உள்ளிட்ட 9 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்கள் மீது ஐபிசி 143 (பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படும் வகையில் ஒன்று கூடுதல்), 290 (பொது இடத்தில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளுதல், மற்றும் r/ 2 41(6) சென்னை மாநகர போலீஸ் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இதன் நகலை போலீஸார் பச்சையப்பன் கல்லூரி முதல்வருக்கும் அனுப்பி வைத்தனர்.
அதன் அடிப்படையில் மேற்கண்ட 9 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.