Published : 08 Jun 2019 12:23 PM
Last Updated : 08 Jun 2019 12:23 PM

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் வழங்கக்கோரி வலியுறுத்துவேன்: சு.வெங்கடேசன் உறுதி

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் வழங்கக்கோரி வலியுறுத்துவேன் என்று மதுரை எம்.பி.யும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 

2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. பின்னர் மதுரை தோப்பூர் தேர்வுசெய்யப்பட்டு, அங்கு இந்த மருத்துவமனை அமையும் என்று 2018-ம்ஆண்டு ஜூன் 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்தடிசம்பர் 17-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

 

கடந்த ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக மதுரை வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட நிலத்தைகூட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில் இதுதொடர்பாகத் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சு.வெங்கடேசன், ''மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு இன்னும் நிலம் வழங்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. உண்மையிலேயே இத்தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பிரதமரே அடிக்கல் நாட்டிச்சென்ற ஒரு திட்டத்துக்கு இன்னும் மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

 

உடனடியாக மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கிற பணியை உடனடியாக முதன்மைப் பணியாகத் தொடங்கவேண்டும். எய்ம்ஸ் போன்ற ஒரு பெருநிறுவனம் தமிழகத்துக்கு குறிப்பாக தென் மாவட்டத்துக்கு வந்திருப்பது முக்கியமான ஒன்று. பத்தாண்டுகளுக்கும் மேல் நடந்த போராட்டத்தின் விளைவாக தமிழகத்துக்கு எய்ம்ஸ் வந்துள்ளது. மாநில அரசு உடனடியாக மருத்துவமனைக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து வழங்கவேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வலியுறுத்துவேன்'' என்றார் சு.வெங்கடேசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x