சட்டவிரோத பேனர்கள்; அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை: உயர் நீதிமன்றம் கருத்து

சட்டவிரோத பேனர்கள்; அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை: உயர் நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

சட்டவிரோத பேனர்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசின் மீது டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேனர்கள் அச்சிடுவதை தடுக்க அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் தெரிவித்தார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் என்றும் இது நீதிமன்றத்தின் வேலை இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விஐபிகள் வைக்கும் பேனர்களை தினந்தோறும் பார்க்க முடிகிறது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பேனர் வழக்கு குறித்து தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in