Published : 07 Jun 2019 03:34 PM
Last Updated : 07 Jun 2019 03:34 PM

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை: தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்

அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை என்றும், போதுமான ஆசிரியர்கள், கட்டிடம், அடிப்படை வசதிகள், காற்றோட்டமான சூழல் ஆகியவை இல்லாமல் பள்ளிகளில் செயல்படுவதாக வழக்கறிஞர் ரமணி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக மே மாதம் 24 ஆம் தேதி அளித்த மனுவில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்படும் 903 பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளுக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x