Last Updated : 07 Jun, 2019 03:19 PM

 

Published : 07 Jun 2019 03:19 PM
Last Updated : 07 Jun 2019 03:19 PM

பிரசவத்தில் தாய், சிசு மரணம்: செவிலியர் பிரசவம் பார்த்ததாக புகார்; நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை

திருநெல்வேலியில் பிரசவத்தில் தாய், சிசு மரணம் அடைந்ததால், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அகிலா (25). கர்ப்பிணியான அகிலா, திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று மருத்துவர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. பிரசவத்தில், அகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், சிறிது நேரத்தில் குழந்தையும், அகிலாவும் உயிரிழந்துவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அகிலாவின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் திரண்டனர். 24 மணிநேரமும் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் பிரசவம் பார்க்கப்பட்டதைக் கண்டித்தும், தாய், சிசு மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர். இதையடுத்து, மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். தாய், சிசுவின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் அனிதாவின் உறவினர்கள் மனு அளித்தனர். அதில், அனிதா, அவரது குழந்தை இறப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதார நிலையத்தில் பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து, தாய், சிசு உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x