Published : 22 Jun 2019 09:47 PM
Last Updated : 22 Jun 2019 09:47 PM

ஊடகங்கள் எனது பேச்சை திரித்துவிட்டன: துரைமுருகன் கோபம்

நான் பேசியதை சில பத்திரிகைகளும்  ஊடகங்களும், திரித்து ‘ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போவதற்கு துரைமுருகன் எதிர்ப்பு’ என்று தவறாக தலைப்பிட்டு மக்களிடத்தில்  தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்கள் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஜோலார்ப்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவர முதல்வர் ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது குறித்து பேசும்போது  "300 ஏரிகளைத் தூர் வாரினோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அந்த 300 ஏரிகளின் பெயர்களைக் கொடுங்கள் என நான் கேட்டேன். இதுவரை அதனைக் கொடுக்கவில்லை. என் தொகுதியில் தூர் வாரிய ஏரிகளின் பட்டியலைக் கேட்டேன். அதனையும் இன்னும் கொடுக்கவில்லை.

ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் எடுத்துச் சென்றால் மாவட்டம் தழுவிய போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும்", என துரைமுருகன் தெரிவித்ததாக செய்தி வெளியானது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் சிவி சண்முகம் போன்றோர் துரைமுருகனை விமர்சித்தார்கள். இதுகுறித்து தற்போது துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“திமுக ஆட்சியில் தலைவர் கலைஞரும் மு.க.ஸ்டாலினும், வேலூர் மாவட்டத்திற்கென்று காவேரி தண்ணீரை ஒரு கூட்டுக் குடிநீர் திட்டமாக அறிவித்தார்கள். திருப்பத்தூரிலிருந்து அரக்கோணம்வரையில் இருக்கின்ற பல நகரங்களுக்கும் , பல கிராமங்களுக்கும் காவேரி நீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

 அனைத்து நாட்களும் கிடைத்துக்கொண்டிருந்த, அத்தண்ணீரும்  தற்பொழுது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமேகிடைக்கிறது.  இந்த நிலையில், அந்த காவேரி தண்ணீரை மறித்து,ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு கொண்டு போவதாக இங்கே பேசிய பலர்தெரிவித்தனர். அப்படி கொண்டு போவது நியாயமும் அல்ல  விவேகமும் அல்ல.

ஜோலார்பேட்டையைத் தவிர, வேறு எங்காவது தண்ணீர் கிடைத்தால், அதனைசென்னைக்கு கொண்டு போவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை.

அதைவிடுத்து, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வினியோகிக்கப்படுகிற, பற்றாக்குறையுடன் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்ற காவேரி நீரை மறித்து,சென்னைக்கு கொண்டு போனால், எங்கள் வேலூர் மாவட்ட மக்கள் ஒருபோராட்டத்தில் ஈடுபடுவார்கள்" என்றுதான் நான், இன்று காலை, வேலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.

ஆனால், இப்பேச்சினை சில பத்திரிகைகளும்  ஊடகங்களும், திரித்து ‘ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போவதற்குதுரைமுருகன் எதிர்ப்பு’ என்று தவறாக தலைப்பிட்டு மக்களிடத்தில்  தவறானபிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

சென்னையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறவன் நான், சென்னையில்  என்ன நடக்கிறது என்று நன்றாகவே தெரியும். எனவே, ஒரு தவறான பிரச்சாரத்தை துவக்கி, அதன் மூலம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x