Published : 16 Jun 2019 04:14 PM
Last Updated : 16 Jun 2019 04:14 PM

பிளாஸ்டிக் பயன்பாடு, விற்பனைக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம்: திங்கள் முதல் நடைமுறைக்கு வருகிறது

தமிழகத்தில் பிளாஸ்டிக்கை விற்றால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது, இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், நாளை முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

 

இதற்காகவென்றே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக பயன்படுத்தும் பெரிய கடைக்காரர்கள், சிறிய கடைக்காரர்கள், பொதுமக்கள் என ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

 

முதல் முறை பிடிப்பட்டால் 25 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ஐம்பதாயிரமும், மூன்றாவது முறை சிக்கினால் ஒரு லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. நான்காவது முறையாக பிடிபட்டால், விற்பவரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பொதுமக்களை பொறுத்தவரையில், அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்யும்போது பிளாஸ்டிக் பொருட்களை வைத்து இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x