Published : 10 Jun 2019 12:01 PM
Last Updated : 10 Jun 2019 12:01 PM

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அரசு அனுமதிக்காது: முதல்வர் வி.நாராயணசாமி உறுதி

புதுச்சேரியின் எந்தவொரு பிராந்தி யத்திலும் ஹைட்ரோகார்பன் எடுக்க அரசு அனுமதிக்காது என முதல்வர் வி.நாராயணசாமி கூறினார்.

காரைக்காலில் நேற்று புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கத்துடன் சென்று, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் வி.நாராயண சாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். அதற்கு அனுமதி கிடைத்து பிரதமரை சந்திக்கும்போது, புதுச்சேரி மாநிலத்துக்கான நிதியாதாரம், கடன் தள்ளுபடி, மாநில அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச திட்டமிடப்பட்டுள் ளது. நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்பதால், எந்தப் பயனும் இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அந்தக் கூட்டத்தில், புதுச்சேரி அரசு சார்பில் பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை அறிவுறுத்தலின்படி நடந்துகொள்வோம்.

தற்போது, குறுவை சாகுபடி பருவம் என்பதால், காரைக்காலுக்குரிய காவிரி நீரைப் பெறுவதற்கு புதுச்சேரி அரசு உறுதுணையாக இருக்கும். ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயம், நிலத்தடி நீர் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் ஒன்றுபட்டு எதிர்க்கிறார்கள். புதுச்சேரி அரசும் எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறது.

புதுச்சேரியின் எந்தவொரு பிராந்தியத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளிக்காது. இத்திட்டம் குறித்து புதுச்சேரி அரசின் நிலைப்பாடு தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x