Published : 06 Jun 2019 01:42 PM
Last Updated : 06 Jun 2019 01:42 PM

நீட் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: 2 நாட்களில் 3 மாணவிகள் உயிரை மாய்த்த சோகம்

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலுள்ள கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த மோனிஷா (18) என்ற மாணவி இன்று (வியாழக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

மோனிஷாவின் தந்தை மோகன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மோனிஷாவின் தாயார் இறந்துவிட்டார். தந்தை மற்றும் இரண்டும் தங்கைகளுடன் மோனிஷா வசித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடித்தவர்.

நீட் தேர்வுக்குக்காக கடந்த ஒராண்டாக புதுச்சேரியில் தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மன வருத்தத்தில் இருந்த அவர் இன்று காலை தங்கைகள் வேலைக்குச் சென்ற பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

3 பக்கம் கடிதம் எழுதி வைத்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பிரேதத்தைக் கைப்பற்றிய போலீஸார் அதனை புதுச்சேரி பாராமெடிக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக நேற்று (புதன்கிழமை) மதியம் 2 மணியளவில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் (NEET) தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நேற்று இருவர் தற்கொலை:

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். மாணவி ரிதுஸ்ரீ 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் இந்த துயர முடிவை எடுத்துள்ளதாக அவரது உறவினர்கள் கூறினர்.

அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்திலும் நீட் தேர்வு தோல்வியால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா என்ற மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணம் எனக் கூறப்படுகிறது.

தலைவர்கள் கண்டனம்:

நீட் தேர்வு முடிவால் தமிழகத்தில் இரண்டு நாட்களில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

"நீட் தேர்வு தோல்வியால்,தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி. கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் செயல்படும் இந்தியாவில், நீட் விலக்கு எனும் மாநில அரசின் உணர்வுக்கு மதிப்பளிப்பது,மத்திய அரசின் அரசியல் சட்டக் கடமை என்பதை பிரதமர் இப்போதாவது உணர வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வு அவசியமில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நீட் தேர்வு தற்கொலைகளை நாங்கள் படுகொலை என்றே சொல்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x