Published : 07 Jun 2019 03:08 PM
Last Updated : 07 Jun 2019 03:08 PM
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்பது குறித்து, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குடிநீர் மற்றும் மின்சார சீரமைப்பு தொடர்பான அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது.
கடந்த சில ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகம் தமிழகத்துக்குத் தரவேண்டிய தண்ணீரைத் தராததாலும் குறுவை சாகுபடி நடைபெறவில்லை.
ஆழ்குழாய் கிணற்றுப் பாசனம் மூலமாக மட்டுமே குறுவை சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில், குறுவை சாகுபடி செய்ய முடியுமா, முடியாதா என்பது குறித்து அரசு உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றார்.
முன்னதாக, மன்னார்குடி அருகே உள்ள வடுவூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:
ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. மத்திய அரசும் மக்களுக்கு விரும்பாத திட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம் எனக் கூறி வருகிறது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்துக்கு நீட் தேர்வை கொண்டுவந்தது திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும்தான். தற்போது தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT