Last Updated : 25 Jun, 2019 05:38 PM

 

Published : 25 Jun 2019 05:38 PM
Last Updated : 25 Jun 2019 05:38 PM

சர்ச்சை ஆடியோ வெளியானதால் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்ற தங்கதமிழ்ச்செல்வன்: விளக்கம் பெறுவதில் சிக்கல்

தங்கதமிழ்ச்செல்வனை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதால் அவருடைய விளக்கத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்கதமிழ்ச்செல்வன் கட்சியின் நிறுவனர் டிடிவி.தினகரனை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்த ஆடியோ வெளியானதால் அக்கட்சி தலைமை கடும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தங்கதமிழ்ச்செல்வன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதால் கட்சி தலைமையில் இருந்து விளக்கங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமமுகவில் தினகரனுக்கு அடுத்த நிலையில் தங்கதமிழ்ச்செல்வன் இருந்து வந்தாலும் தேர்தல் தோல்வி இவருக்குள் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது.

பல யோசனைகளை தினகரன் புறக்கணித்ததால்தான் கட்சியின் நிலை திசைமாறி சென்று கொண்டிருக்கிறது என்று நெருக்கமானவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார் தங்கதமிழ்ச்செல்வன்.

மேலும் தான் கட்சியின் முக்கிய நிர்வாகி என்பதை மறந்து ஊடகங்களில் கட்டுப்பாடின்றி தனது கருத்துக்களைத் தெரிவிக்கத் துவங்கினார்.

அதிமுகவில் கம்பீரமாக வலம் வந்தவருக்கு எம்எல்ஏ.தகுதி இழப்பு, மக்களவைத் தேர்தல் தோல்வி, அமமுக. தலைமையின் கண்டிப்பு போன்றவற்றை தாங்க முடியவில்லை.

இதனால் சமீபகாலமாக முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமானவர்களிடம் தனது ஆதங்கத்தையும், எதிர்பார்ப்பையும் கூறி வந்துள்ளளார்.

இந்நிலையில் ரகசியக்கூட்டங்களை அதிகம் நடத்தியதுடன் கட்சி நிர்வாகியுடன் கட்சி மற்றும் தினகரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இது சமூகவலைதளங்களில் பரவி கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த பிரச்னை ஒரே நாளில் பொதுவெளிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகள் சென்னைக்கு  அழைக்கப்பட்டு தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியினர் பலரும் தங்கதமிழ்ச்செல்வனுக்கு எதிராக பல்வேறு வாதங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் தங்கதமிழ்ச்செல்வனை செய்தியாளர்கள் பலரும் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது இணைப்பு தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்து வருகிறது.

இது குறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்ட போது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான செயல்பாடு கொண்டவர் என்பதால் அவர் மூலம் அதிமுகவில் இணைய முடியாது என்பதால் முதல்வர் பழனிசாமியுடன் இருக்கும் நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு வந்தார்.

பழனிசாமி தரப்பில் இதற்கு சம்மதிக்க முன்வந்தாலும் பன்னீர்செல்வத்திடம் எதிர்ப்புநிலையே இருந்து வருகிறது. தற்போது பிரச்சினை தீவிரநிலையில் இருப்பதால் சில நாட்கள் கழித்து தனது நிலைப்பாடை தெரிவிப்பார் என்றனர்.

இருப்பினும் அதிமுக தொண்டர்களிடையே இவர் குறித்து கடுமையான விமர்சனங்களே இருந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் அமமுகவிற்கு ஓட்டு போடாவிட்டலும் திமுகவிற்கு போடுங்கள் என்று கூறிவந்தார். மேலும் அதிமுக ஆட்சியை கலைப்பேன் என்றும் சவால் விட்டுள்ளார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேர்தலில் போட்டியிட்ட போது தனிப்பட்ட விஷயங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ததுடன் அவரைத் தோற்கடிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். மீண்டும் அதிமுக விற்கு வந்தால் பகைஉணர்வு தொடரும். இது கட்சிக்கு நல்லதல்ல என்றனர்.

இருப்பினும் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டால் ஒரே பாதை அதிமுகவை நோக்கியதாகவே இருக்கும். இப்பிரச்னையை சில நாள் ஆறப்போட்டுவிட்டு மீண்டும் அதைநோக்கிய பயணமாகவே இவரது அரசியல் இருக்கும் என்றே பலரும் கூறி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x