Published : 21 Jun 2019 12:52 PM
Last Updated : 21 Jun 2019 12:52 PM
காவிரி நதிநீர் பங்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தின் தண்ணீர் தேவையை மட்டுமல்ல, நியாயத்தையும் கவனத்தில் கொண்டு கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைத்திட வழிவகுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 9-வது கூட்டம் முடிவடைந்த நிலையில் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரில் ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி தண்ணீர் முழுமையாக கிடைக்கப்பெற காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். காரணம் கர்நாடக அரசு இந்த ஜூன் மாதத்திற்கு தமிழகத்துக்கு உரிய 9.19 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய சூழலில் 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 1.729 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துள்ளது.
மேலும் காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மழை குறைவாகப் பெய்துள்ளது என்பதால் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் பொய்யான தகவலைத் தந்து தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசின் வீண் பிடிவாதப்போக்கை காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், மத்திய அரசும் நன்கு அறியும்.
குறிப்பாக வியாழக்கிழமை காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் ஒழுங்காற்றுக்குழு தனது அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அளிக்கிறது. இச்சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வருகின்ற 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் நியாயமான அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் தமிழகத்துக்கான ஜூன் மாதத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு இப்போதே வலியுறுத்த வேண்டும்.
காரணம் தமிழகத்தில் தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பெரும்பாலான மாவட்ட மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இச்சூழலில் வருகின்ற 25 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழகப் பிரதிநிதிகள் தங்களது நியாயமான வாதத்தை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து மேலாண்மை ஆணையத்தை வற்புறுத்தி தமிழகத்துக்கான தண்ணீரைப் பெற வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தின் தண்ணீர் தேவையை மட்டுமல்ல, நியாயத்தையும் கவனத்தில் கொண்டு கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் கிடைத்திட வழி வகுக்க வேண்டும்", என, ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT