

அறநிலையத்துறையின் அனுமதியில்லாமல் மேல்மருவத்தூரில் ஆய்வு நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆய்வு நடத்திய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், கடந்த 1989-ம்ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்துவிலக்கு அளிக்கப்பட்ட கோயிலாக அறிவிக்கப்பட்டது.
இக்கோயிலில் திருக்கோயிலுக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளதால் இதை இந்துசமய அறநிலையத்துறை கொடைகள் சட்டப்பிரிவு 30 முதல் 63 வரையில் அளிக்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இக்கோயிலை இத்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்று மதுராந்தகம் சரக ஆய்வர் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார்.
இது தொடர்பாக ஆய்வுசெய்ய இந்து சமய அறநிலயைத் துறை உதவி ஆணையர் ரமணி, திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், இந்து சமயஅறநிலையத் துறை ஆய்வாளர்கள் சுரேஷ், மனோகரன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த ஆய்வுக் குழுவினர் கோரும் தகவல்கள், ஆவணங்கள், பதிவேடுகள் ஆகியவற்றை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவு நகலுடன் உதவி ஆணையர் ரமணி தலைமையிலான குழுவினர் மேல்மருவத்தூர் கோயிலுக்கு ஆய்வு செய்ய சென்றனர். ஆனால் மேல்மருவத்தூர் கோயிலில் இருந்தவர்கள் இவர்களை ஆய்வு செய்யவிடாமல் இவர்களுடன் வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து ஆய்வு செய்யாமல் திரும்பிய அற நிலையத் துறை அதிகாரிகள் தங்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்ஊழியர்கள் மீது மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்திய விவகாரம் தொடர்பாக வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அறநிலையத்துறையின் அனுமதியில்லாமல் மேல்மருவத்தூரில் ஆய்வு நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு நடத்திய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.