Published : 08 Jun 2019 12:30 PM
Last Updated : 08 Jun 2019 12:30 PM
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி, கல்வியியல் முடித்த பட்டதாரிகள், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்க டெட் தேர்வின் முதல் தாளிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்க இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்நிலையில் டெட் முதல் தாள் தேர்வு இன்றும் (சனிக்கிழமை), இரண்டாம் தாள் தேர்வு நாளையும் நடைபெறுகிறது. முதல் தாள் எழுத ஒரு லட்சத்து 83,000 பேரும், இரண்டாம் தாள் எழுத 4 லட்சத்து 20,815 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் முதல் தாளுக்கு 471 மையங்களும், இரண்டாம் தாளுக்கு 1,081 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில், முதல் தாளுக்கு 28 மையங்களும், இரண்டாம் தாளுக்கு 60 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். இந்நிலையில், காலையில் ஒரு மணிநேரத்திற்கு முன்னரே 9 மணிக்கு தேர்வர்கள் தேர்வறையில் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வறைக்குள் ஹால் டிக்கெட், பேனா தவிர்த்து செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. முறைகேடுகளைத் தடுக்க 2,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT