Published : 21 Jun 2019 03:10 PM
Last Updated : 21 Jun 2019 03:10 PM

2 நாட்களுக்கு சென்னை, புதுவையில் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, புதுவையில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று (வெள்ளிக்கிழமை) பேசியதாவது:

''தென்மேற்குப் பருவ மழையானது தமிழகத்தின் இதர பகுதிகள், ராயலசீமா மற்றும் ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் தொடங்கியுள்ளது. நேற்று  தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. குறிப்பாக மீனம்பாக்கத்தில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

பருவமழை தொடங்கி இன்று வரை பதிவான மழையளவு 24.8 மி.மீ., இக்காலகட்டத்தின் இயல்பான மழை அளவு 39.6 மி.மீ., இயல்பை விட 37% குறைவாக மழை பெய்துள்ளது.

வெப்பம் குறையும்

இனி வரும் காலங்களில் தமிழகத்தில் நிலவும் வெப்பநிலை குறையும். தென்மேற்குப் பருவநிலை நகர்ந்துள்ள நிலையில், வெப்பம் குறையத் தொடங்கும்.

சென்னையில் வெப்பநிலை தற்போது 38 டிகிரியாகக் குறைந்துள்ளது. இனி படிப்படியாகக் குறைந்து மிதமான வெப்பம் நிலவும்''.

இவ்வாறு தெரிவித்தார் பாலச்சந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x