Last Updated : 12 Jun, 2019 02:43 PM

 

Published : 12 Jun 2019 02:43 PM
Last Updated : 12 Jun 2019 02:43 PM

ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய வேன்: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் விபத்தில் சிக்கியது. இதில் 2 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர நிர்வாகம் சார்பில் மினி வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டு, வடக்கரை, சின்னபள்ளிகுப்பம், மேலகுப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வர மினி வேன் ஒன்று இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு ஈச்சம்பட்டு பகுதிக்கு வந்தது. அங்கிருந்து ஒவ்வொரு பகுதியாக சென்று தொழிலாளர்கள் 25 பேரை ஏற்றிக்கொண்டு மினி வேன் துத்திப்பட்டு நோக்கிப் புறப்பட்டது.

ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த குமரன் (26) என்பவர் வேனை ஓட்டிச் சென்றார். வடகரை கிராமத்தில் 4 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் தொழிற்சாலைக்குப் புறப்பட்ட போது, எதிரே அதேபகுதியைச் சேர்ந்த துரை மனைவி சிகாமணி (54) என்பவர் வேனை நோக்கி ஓடி வந்தார்.

வேன் ஓட்டுநர் குமரன் சட்டென பிரேக்கைப் பிடித்தார். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் தாறுமாறாக ஓடி அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே, வேனில் இருந்த பெண் தொழிலாளர்கள் அலறிக் கூச்சலிட்டனர். வேனில் இடிபாடுகளில் சிக்கிய 20 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

ஈச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிகாமணி மனைவி உஷா (35), ஆம்பூர் வடகரை பகுதியைச் சேர்ந்த துரை மனைவி சிவகாமி (52) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் முருகன் காயமடைந்தார். மேலும், விபத்தில் சிக்கி ஆம்பூரைச் சேர்ந்த சத்யா, ரீனா, ராதா, மணிமேகலை, மல்லிகா, சித்ரா, வெண்ணிலா, செல்வி, மகேஸ்வரி, திவ்யா உட்பட 20 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வந்தனர்.

உடனே, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம், உமராபாத் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், சத்யா, ரீனா, ராதா மற்றும் மணிமேகலை ஆகிய 4 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். வேன் ஓட்டுநர் குமரன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x