Published : 19 Jun 2019 07:10 PM
Last Updated : 19 Jun 2019 07:10 PM

வைகோ மீதான தேசத்துரோக வழக்கு; ஜூலை 5-ல் தீர்ப்பு: சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

2009-ம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பதிவான தேசத்துரோக வழக்கு விசாரணை முற்றிலும் முடிவடைந்த நிலையில் வழக்கு மீதான தீர்ப்பு ஜூலை 5-ம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை மன்றத்தில் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததால்,  வைகோ மீது தேசத்துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு போலீஸாரால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன் நடைபெற்று வந்தது. வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் வைகோ நேரில் ஆஜராகி வாதாடி வருகிறார்.

குற்றச்சாட்டு பதிவு, அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் சாட்சி விசாரணை, சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம், குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள், எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தல் என அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை 5-ம் தேதி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x