Published : 22 Jun 2019 02:18 PM
Last Updated : 22 Jun 2019 02:18 PM

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துச் சென்றால் போராட்டம்: துரைமுருகன் பேட்டி

ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் எடுத்துச் சென்றால் மாவட்டம் தழுவிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டி வரும் என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் சீராக குடிநீர் வழங்கும் வகையில், இந்த ஆண்டு, ஏற்கெனவே ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குடிநீர் திட்டப் பணிகளுக்கு கூடுதலாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இத்தொகை பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில் மூலமாக கொண்டு வந்து சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக தனியாக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து வேலூரில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், "300 ஏரிகளைத் தூர் வாரினோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அந்த 300 ஏரிகளின் பெயர்களைக் கொடுங்கள் என நான் கேட்டேன். இதுவரை அதனைக் கொடுக்கவில்லை. என் தொகுதியில் தூர் வாரிய ஏரிகளின் பட்டியலைக் கேட்டேன். அதனையும் இன்னும் கொடுக்கவில்லை.

ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் எடுத்துச் சென்றால் மாவட்டம் தழுவிய போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும்", என துரைமுருகன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x