Published : 07 Jun 2019 10:39 AM
Last Updated : 07 Jun 2019 10:39 AM

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்: திமுக ஆதரவு

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி - தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத்திட்டங்களை மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றன.

ஜனநாயக ரீதியில் எதிர்ப்புத் தெரிவித்து அறவழியில் போராடுபவர்களை கைது செய்தும், காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி விட்டும் அராஜகம் செய்து வருகிறது. இந்த மக்கள் விரோத ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து விவசாயிகளும் பொதுமக்களும் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள்.

இந்நிலையில், நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டருக்கு மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்து, அந்த போராட்டத்திற்கு திமுகவின் ஆதரவினை கேட்டிருக்கிறார்கள்.

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் - தமிழ்நாடு விவசாயிகளின் உரிமையை மீட்டு எடுக்கவும் - விளைநிலங்களை காப்பாற்றவும் நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆங்காங்கே உள்ள திமுக மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகள், தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்று விவசாயிகளின் வேதனைக் குரலை மத்திய - மாநில அரசுகளுக்கு உணர்த்திட வேண்டும்", என, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x