நீட் தோல்வி: தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்குக; திருமாவளவன்

நீட் தோல்வி: தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்குக; திருமாவளவன்
Updated on
2 min read

நீட் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து தமிழகத்தில் இதுவரை மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழக மாணவர்களின் உயிர்களை இனிமேலும் காவு வாங்காமல் இதிலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும். அதற்கு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நீட் நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 49 சதவீதத்தினர்தான் தேர்ச்சி பெற்றனர். சுமார் 75,000 பேர் இந்தத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். அப்படி தோல்வியடைந்ததால் மனமுடைந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ,  பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஷியா, விழுப்புரம் மாவட்டம் கூனிமேட்டைச் சேர்ந்த மாணவி மோனிஷா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டு உயிர் நீத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. இந்தத் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் நாடு முழுவதற்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்துவதென்பது ஏற்புடையதல்ல. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விதமான பாடத் திட்டங்களைப் பின்பற்றி வரும் சூழலில் மத்திய கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இது பிற வாரியங்களில் பயிலும்  மாணவர்களுக்கு எதிராக உள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவம் என்ற கோட்பாட்டுக்கு எதிரானதாகும். இந்தப் பாகுபாட்டை உச்ச நீதிமன்றமே ஏற்றுக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

நீட் தேர்வு செல்லாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பின்னர் அதே நீதிமன்றமே ரத்து செய்து நீட் தேர்வை நடத்தும்படி கூறியது. அந்தத் தேர்வு நடத்தப்படுவதில் ஒவ்வொரு ஆண்டும் நேரும் பல்வேறுவிதமான கோளாறுகளைச் சுட்டிக்காட்டிய பிறகும், வழக்குகள் தொடுக்கப்பட்ட பிறகும் உச்ச நீதிமன்றம் தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள மறுத்து வருகிறது. மத்திய அரசின் கையில் அதிகாரங்களைக் குவிப்பதற்கு உச்ச நீதிமன்றமே வழிவகுப்பது நீதிபரிபாலன முறையின் மீதே நம்பிக்கை இழக்கச்செய்கிறது. இதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு தமிழக அரசு உரிய அரசியல் அழுத்தத்தைத் தரவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நீட் தொடர்பான மரணங்களுக்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம். இனியாவது பாஜக அரசு தனது தவறை உணர்ந்து தமிழ்நாட்டுக்குத் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்", என, திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in