Published : 04 Jun 2019 04:24 PM
Last Updated : 04 Jun 2019 04:24 PM
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டைத் தடை செய்யவேண்டும் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காக மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் பீட்டா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பீட்டா இன்று வீடியோ காட்சிகளுடன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ''இந்த ஆண்டு அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது 8 பேர் உயிரிழந்துள்ளனர். 5 மாடுகள் பலியாகி உள்ளன. ஏராளமான வீரர்களும் காளைகளும் காயமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஆய்வுகள் மேற்கொண்டோம். போட்டிகளின்போது காளைகள் சுமார் 16 மணி நேரங்கள் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு, கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டது முதல் 42 வீரர்களும் 15 மாடுகளும் பலியாகி உள்ளனர். அதிகபட்ச அளவில் விலங்குகள் கொடுமைப்படுத்தப் படுகின்றன. மனித உயிர்களுக்கு மதிப்பு அளிக்கப்படுவதில்லை. இத்தகைய நிகழ்வுகளை அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்துக்கும் ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற முதல்வருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் ஜல்லிக்கட்டுப் போட்டியை நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்'' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT