

நளினியை நேரில் ஆஜர்படுத்த முடியாது என்றும், காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்துகிறோம் என்றும் அரசுத் தரப்பு அளித்த பதிலால் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், காணொலிக் காட்சி மூலம் ஆஜராவதில் நளினியின் நிலைப்பாட்டைக் கேட்டுத் தெரிவிக்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி தனது மகள் (ஹரித்ரா) திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி வழக்கு தொடர்ந்தார். அதேபோல இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட அனுமதி கோரியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. 25 காவலர்கள் வரை பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்க வேண்டும். பாதுகாப்புக் காரணங்களுக்காக நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது'' என தெரிவிக்கப்பட்டது..
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் ஆஜராக நினைக்கும் ஒருவரை அரசு எவ்வாறு தடுக்கும் என கேள்வி எழுப்பினர். சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு, பாதுகாப்புக் காரணங்களால் ஆஜர்படுத்த இயலாது என எவ்வாறு கூற முடியும் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, நளினியை காணொலிக் காட்சியின் மூலம் ஆஜர்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தது.
இதுகுறித்து அடுத்த வாரத்திற்குள் நளினியிடம் தகவல் பெற்றுத் தர சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நளினியின் முடிவை வைத்துதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.