Last Updated : 12 Jun, 2019 03:58 PM

 

Published : 12 Jun 2019 03:58 PM
Last Updated : 12 Jun 2019 03:58 PM

சிபிஎஸ்இ பள்ளியில் படித்த தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த முன்னுதாரண  தலைமையாசிரியை

ராமநாதபுரத்தில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்த தனது மகளை தான் பணியாற்றும் அரசுப் பள்ளியில் சேர்த்து, மற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த தலைமையாசிரியையை பெற்றோர்கள் பாராட்டுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகே வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது.

இப்பள்ளியில் தமிழ் வழியுடன், ஆங்கில வழிக்கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஸ்மார்ட் வகுப்பறை உள்ளது.

தரமான கல்வி கற்றுத்தருவதால் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைத்த பெற்றோர்கள் கூட தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இதற்குக் காரணம் இப்பள்ளியின் தலைமையாசிரியை தே.எஸ்தர் வேணி. இவர் இப்பள்ளியில் 2009-ம் ஆண்டு தலைமையாசிரியராக பொறுப்பேற்கும்போது 78 மாணவர்களே  இருந்தனர். ஆனால் இன்று 270 மாணவர்கள் பயில்கின்றனர். இந்தாண்டு மட்டும் 80 குழந்தைகள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தாண்டு தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்த தனது மகளை தனது பள்ளியில் சேர்த்து முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார் தலைமையாசிரியை.

கீழக்கரையைச் சேர்ந்தவர் தலைமையாசிரியை எஸ்தர் வேணியின். இவரது கணவர் பெஞ்சமின் வசீந்திரன், கீழக்கரையில் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். மூத்த பெண் கீழக்கரையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகளான பிளஸ்ஸி பென் ஹெட்சியாள், அதே சிபிஎஸ்இ பள்ளியில் 4ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார்.

தங்களது பள்ளியில் தரமான கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதனால் தங்கள் பள்ளிக்கு வருகிறீர்களா என தனது மகள்களை எஸ்தர் வேணி கேட்டுள்ளார்.

தனது தாயின் வேண்டுகோள் மற்றும் தனது விருப்பத்தால் வள்ளல் பாரி அரசு பள்ளியில் சேர பிளஸ்ஸி மட்டும் ஒப்புக்கொண்டார்.

அதனையடுத்து கடந்தை 7ம் தேதி தனது பள்ளியிலேயே மகளை 5-ம் வகுப்பில் சேர்த்தார் தலைமையாசிரியை. தற்போது மற்ற குழந்தைகளுடன் வகுப்பில் மகிழ்ச்சியாக பாடம் படித்து வருகிறார் பிளஸ்ஸி.

தலைமையாசிரியை எஸ்தர் வேணி கூறியதாவது, தமிழக பாடத்திட்டம் சிபிஎஸ்இக்கு இணையாக உள்ளது. எனது ஆசிரியர்கள் மீது நம்பிக்கை மற்றும் எனது மகளின் விருப்பப்படி எங்கள் பள்ளியில் மகளை சேர்த்துள்ளேன்.

மற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பெற்றோர்கள் மத்தியில் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பது எனது நோக்கம்.

பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும். எங்களது பள்ளியில் பல்வேறு அரசுத்துறை பணியாளர்களின் குழந்தைகள், தனியார் கல்லூரி பேராசிரியரின் குழந்தைகள் படிக்கின்றனர்.

எங்களது பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை, கையடக்க கணினி மூலம் மாணவர்களுக்கு பாடம் மற்றும் தேர்வு நடத்தி வருகிறோம் என்றார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசுப் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற கூற்றுக்கு தலைமையாசிரியை எஸ்தர் வேணி முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x