Published : 20 Jun 2019 02:47 PM
Last Updated : 20 Jun 2019 02:47 PM
கருணாநிதிக்கு எதிராகப் பேசியதாக வைகோவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 2 அவதூறு வழக்குகளில் ஒன்றை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மற்றொரு வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்துவிட்டது.
கடந்த 2006-ம் ஆண்டு மதிமுகவை உடைக்க அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி முயற்சிப்பதாக வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் வைகோவிற்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதேபோன்று கடந்த 2009-ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு அப்போதைய முதல்வர் திமுக தலைவர் கருணாநிதிதான் காரணம் என புரசைவாக்கம் தானா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.
இந்தக் கூட்டத்தின் அடிப்படையில் அவர் மீது மற்றொரு அவதூறு வழக்கு தமிழக அரசால் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தமிழக அரசின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த இரண்டு வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்கும்படி வைகோ அளித்த மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை. இதை அடுத்து வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. வைகோ தாக்கல் செய்த மனுவில், ''தனக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆகவே, வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.
இந்த இரண்டு வழக்கையும் விசாரித்த நீதிபதி பி.என். பிரகாஷ், மதிமுகவை உடைக்க மறைந்த முதல்வர் கருணாநிதி முயற்சித்தார் என்று கூறி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதிய வழக்கில் வைகோவை விடுவிக்க முடியாது என உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் தாக்குதல் தொடர்பாக மறைந்த முதல்வர் கருணாநிதியை தொடர்புபடுத்திப் பேசிய குற்றச்சாட்டு தொடர்பான அவதூறு வழக்கில் இருந்து வைகோவை விடுவித்து நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT