Published : 18 Jun 2019 08:37 PM
Last Updated : 18 Jun 2019 08:37 PM

புழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள்: போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கிடம் தீவிர விசாரணை

கோவை ஐஎஸ் தீவிரவாதி சம்பந்தமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

ஐஎஸ் அமைப்பு தொடர்பாக கோவை, மதுரை, கேரளா, ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று மாலை திடீரென புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் அத்வானி வரும்போது பைப் குண்டு வைத்தது, பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொலை வழக்கில் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உட்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம், கேரளாவில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் பிடிக்கும் வேலைக்கும், ஆதரவு மற்றும் நிதி திரட்டும் வேலையிலும் பலர் ஈடுபட்டு கைதானார்கள். இதில் கோவையில் கைதான ஆஷிக் குறித்த சில தகவல்கள் புலன் விசாரணையில் என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் இன்று மாலை என்ஐஏ டிஎஸ்பி சாகுல் ஹமீது தலைமையில் 4 அதிகாரிகள் புழல் சிறைக்குச் சென்று சுமார் நான்கு மணி நேரம் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயிலிடம் விசாரணை நடத்தினர்.

இதில் குறிப்பிடத்தக்க தகவல் எதுவும் கிடைக்கவில்லை என அவ்வமைப்பு தரப்பு வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x