Published : 20 Jun 2019 03:26 PM
Last Updated : 20 Jun 2019 03:26 PM

ஊட்டியில் இரு மலைகள் இடையே அனுமதியின்றி தடுப்பணை கட்டும் ரியல் எஸ்டேட் நிர்வாகம்

உதகை அருகே தனியார் எஸ்டேட்டில் அனுமதியின்றி ஓடையை மறித்து இரு மலைகளிடையே எஸ்டேட் நிர்வாகம் தடுப்பணை கட்டி வருகிறது. இதனால், விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ளது தேவர்சோலை கிராமம். தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில், தேயிலைக்குப் போதிய விலை இல்லாததால், பலர் தங்களின் தேயிலைத் தோட்டங்களை விற்பனை செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர்கள், இப்பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களை வாங்கி, அவற்றை பிளாட் போட்டும், தங்கும் விடுதிகள் கட்டியும் விற்கின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தை வாங்கியுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, அப்பகுதியில் விடுதிகள் கட்டி வருகிறது. மேலும், அப்பகுதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஓடையை மறித்துத் தடுப்பணை கட்டி, நீர்த் தேக்கம் அமைக்கவும், அதில் படகு சவாரி விடவும் முடிவு செய்துள்ளது.

அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. அங்குள்ள ஓடையை மறித்து தற்போது தடுப்பணை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அப்பணிகள் 50 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளன.

இந்நிலையில், இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால், ஓடையின் கீழ்ப்புறம் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல், விவசாயம் செய்ய முடியாது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறும் போது, ''தேவர்சாலை பகுதியில் உள்ள இயற்கை நீரூற்றுகள் தண்ணீருக்கான ஆதாரம். குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு இந்த நீரூற்றுகளையே நம்பியுள்ளோம். இந்நிலையில், தனியார் எஸ்டேட் நிர்வாகம் நீரோடையின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், எஸ்டேட்டின் கீழ்ப்புறம் உள்ள விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது. இதனால், அந்த நிலங்களில் விவசாயமும் செய்ய முடியாது. ஏற்கெனவே கோடை காலத்தில் நீரோடை வறண்டு விடுவதால், விவசாயம் செய்ய முடிவதில்லை.

உயர் நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இங்கு நீதிமன்ற உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டு, ஓடையை மறித்துத் தடுப்பணை கட்டப்படுவது வேடிக்கையாக உள்ளது. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை'' என்றனர்.

அனுமதி பெறாமல் கட்டப்படும் தடுப்பணை

ஓர் அணையைக் கட்ட மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். அரசு தடுப்பணை கட்ட வேண்டுமென்றாலும் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. குறிப்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், தனியார் தேயிலைத் தோட்டத்தில் நீரோடையை மறித்து இரு மலைகளுக்கு நடுவே பிரம்மாண்ட அணை கட்டி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பணை கட்ட அனுமதி பெறப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். அவர் கூறும் போது, ''தேவர்சோலை பகுதியில் தடுப்பணை கட்ட யாரும் எவ்வித அனுமதியும் பெறவில்லை. கோட்டாட்சியரிடம் அப்பகுதியை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x