Published : 04 Jun 2019 12:18 PM
Last Updated : 04 Jun 2019 12:18 PM

முல்லைப்பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்புக் குழு ஆய்வு

பருவ மழைக்காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்சன் ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்புக் குழு இன்று (செவ்வாய்க்கிழமை) முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். பெரியார் மெயின், பேபி அணை, கேலரி, மதகு பகுதிகளை ஆய்வு செய்தார்கள்

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் மூவர் குழுவை நியமித்தது.

தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரான குல்சன்ராஜ் உள்ளார். தமிழக அரசு பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறையின் கூடுதல் அரசு முதன்மை செயலர் பிரபாகரன், கேரள பிரதிநிதியாக கேரள நீர்வள ஆதார செயலர் அசோகன் ஆகியோர் உள்ளனர். 

 

 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி மூவர்குழு பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 112 அடியாக குறைந்துள்ள நிலையில், இந்த மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால், அணைப்பகுதியில் பருவ மழைக்காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ல் நடைபெற்ற கண்காணிப்புகுழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் குழு தலைவர் குல்சன்ராஜ் கூறுகையில், வள்ளக்கடவு பாதை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அது சீரமைக்கப்படும். பேபி அணை பலப்படுத்தப்படும். அதன்பின் 152 அடி தண்ணீர் தேக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.

ஆனால் ஓராண்டாகியும் இதற்கான பணிகள் நடந்ததாகத் தெரியவில்லை. தமிழக அதிகாரிகள் இதை மறந்திருக்கக்கூடும். எனவே வள்ளக்கடவு பாதை சீரமைப்பு, பேபி அணை பலப்படுத்துவது குறித்து இன்று மாலை குமுளியில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தவேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x