Published : 13 Jun 2019 04:00 PM
Last Updated : 13 Jun 2019 04:00 PM
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் சகோதரர்கள் போல் இருந்து கட்சியை வழிநடத்தி வருவதாக அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
''டெல்லிக்குச் சென்று அமைச்சர்களைச் சந்தித்து மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தோம். அதேபோல தமிழக பாஜக பொறுப்பாளரான ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடமும் பேசினோம். தமிழகம் சார்பான கோரிக்கைகளை முன்வைத்தோம். கோயம்புத்தூர் விமான நிலையத்தின் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று கோரினோம். அதேபோல கோவை, மரப்பாலத்தில் ரயில்வே பணி தொடர்பான அனுமதியைக் கோரியுள்ளோம். தமிழகத்துக்கு ரூ.5,000 கோடிக்கு நிதி வாங்கி உள்ளோம்.
தமிழகத்தில் இயற்கையான வறட்சி நிலவுகிறது. எனினும் கடந்த கால திமுக ஆட்சியைவிட அதிகக் குடிநீரை வழங்கிவருகிறோம். நிலத்தடி நீர் குறைந்துவிட்டதால்தான் பிரச்சினை அதிகமாகி உள்ளது. தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் செய்துதருவதாக பிரதமரும், அமைச்சர்களும் உறுதி அளித்தனர்.
திமுக போல செய்யமுடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து, மக்களை ஏமாற்றி நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் நம்பினர். திமுக அளித்தவை அனைத்துமே தவறான வாக்குறுதிகள்தான். ஆனால் நாங்கள் செய்வதைத்தான் சொன்னோம்.
கோவை மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவரும் இதைப் புரிந்துகொண்டனர். வரும் உள்ளாட்சித் தேர்தலில் இதற்கான முடிவுகளைப் பார்ப்பீர்கள். கொங்கு மண்டலம் இன்னும் அதிமுக வசம் இருக்கிறது என நம்புகிறீர்களா என்று கேட்கிறீர்கள். சூலூரில் வெற்றி பெற்றுள்ளோமே. சூலூர் அதிமுகவின் கோட்டை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் சகோதரர்கள் போல் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள்''.
இவ்வாறு பேசினார் எஸ்.பி.வேலுமணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT