Published : 13 Jun 2019 05:45 PM
Last Updated : 13 Jun 2019 05:45 PM
கட்சித் தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டு பேட்டி எடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெயலலிதா இருந்தவரை ராணுவக் கட்டுப்பாடுமிக்க கட்சி என்கிற நிலையில் செயல்பட்டது அதிமுக. பாஜகவுடன் மத்தியில் கூட்டணி வைக்கலாம் என டெல்லியில் கருத்துச் சொன்ன மலைச்சாமி சென்னை வருவதற்குள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வரலாம் என யூகத்தின் அடிப்படையில் பேசிய செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் பதவி பறிக்கப்பட்டார். ஜெயலலிதாவை தவிர யாரும் வாய் திறக்காத கட்சி, கட்சி மட்டுமல்ல அதிகாரிகளும் வாய் திறக்க பயந்த காலம் உண்டு.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பேசலாம் பேட்டி கொடுக்கலாம் என்ற நிலை உருவானது. இதனால் ஆளாளுக்கு கருத்துச் சொல்வது நடந்தது. இந்நிலையில் அதிமுகவுக்குள் ஒற்றைத்தலைமை கோஷம் வலுத்தது.
அது குறித்த அறிவிப்பு வரை எந்த ஊடகத்திலும் பத்திரிகையிலும் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் கட்சித் தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு வருமாறு:
“அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ கருத்துக்களை தெரிவிப்பதற்காக கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தாங்கள் அறிந்திருப்பீர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்சியின் சார்பில் கருத்துக்களை ஊடகங்கள் பத்திரிகைகள் வாயிலாக தெரிவிப்பது முறையாக இருக்காது என்பதையும் தாங்கள் ஏற்பீர்கள்.
எனவே அன்புகூர்ந்து இனி கட்சியின் பிரதிநிதிகள் என்றோ கட்சியின் பெயரை வேறு எந்த வகையிலோ பிரதிநிதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவிக்க அழைக்கவும் அனுமதிக்க வேண்டாம் என்றும், வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப் படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
அவ்வாறு மீறுகின்றபட்சத்தில் அந்த நபர்கள் கொடுக்கும் பேட்டிகளுக்கோ செய்திகளுக்கோ அதிமுக எந்த வகையிலும் பொறுப்பு ஏற்காது, என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது சம்பந்தமாக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம்”
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT