Published : 20 Jun 2019 01:07 PM
Last Updated : 20 Jun 2019 01:07 PM

பழனி அருகே மாந்தோட்டத்தில் தண்ணீர் தேடி முகாமிட்ட யானைகள்

பழனி அருகே இரண்டாம் நாளாக மாந்தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் தண்ணீர் தேடி முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்டது சட்டப்பாறை. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி ஏராளமான கொய்யா மற்றும் மாந்தோட்டங்கள் உள்ளன. யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் நுழைந்து சேதப்படுத்துவது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக யானைகளின் தொந்தரவின்றி இருந்துவந்த நிலையில் தற்போது கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டாம் நாளாக வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக யானைகள் விளைநிலங்களில் தென்பட ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், சட்டப்பாறை பகுதியில் உள்ள தனியார் மாந்தோட்டத்திற்குள் நள்ளிரவில் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் விடிந்த பின்னும் காட்டுக்குள் செல்லாமல் அங்கேயே முகாமிட்டது.

இதனையடுத்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளைக் கண்காணித்து வருகின்றனர். பகல் நேரம் என்பதால் விவசாயத் தோட்டங்களில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் யானையை விரட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, யானைகளைக் காட்டுக்குள் விரட்டும் பணியை மாலை வரை நிறுத்தி வைத்து அதன்பின்னர் மேற்கொள்ள உள்ளனர். யானைகள் கூட்டத்தால் அப்பகுதியில் விவசாயப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x