

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவரது மகன் ரவீந்திரநாத் குமாருடன் சென்று மரியாதை செலுத்தினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனியிலிருந்து ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் என நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட அரசியலில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
ரவீந்திரநாத்துக்காக தேனியில் பிரதமர் மோடியே வந்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் வரலாற்றில் தேனி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் யாரும் வந்ததே இல்லை.
இந்நிலையில் தேனியில் அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத்துடன் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் இருந்தனர். ஆர்.பி.உதயகுமார், ரவீந்திரநாத்துக்காக தேனி தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.