Published : 09 Jun 2019 02:44 PM
Last Updated : 09 Jun 2019 02:44 PM

குறுவை நெல் சாகுபடிக்கு சிறப்பு தொகுப்புத் திட்டம்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்புத் திட்டம், நிதியுதவி, பைப்பலைன் அமைப்பு, உரங்கள் என தமிழக அரசு உதவி வழங்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழக அரசு - குறுவை சாகுபடி முழுமையாக நடைபெற விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கைகள் எடுத்து, குறுவை தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்தி விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும்

தமிழக அரசு குறுவை சாகுபடி செய்வதற்கு மும்முனை மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட தேவைகளை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். காவிரி டெல்டாவில் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை.

அதே போல இந்த ஆண்டும் 8 ஆவது வருடமாக குறுவை சாகுபடி செய்ய முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும். இந்த ஆண்டாவது குறுவை சாகுபடி முழுமையாக நடைபெற வேண்டும். அதாவது போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் சுமார் 8 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் முதல் 12 இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வரை சாகுபடி நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயம் செய்வதற்கு மும்முனை மின்சாரம், வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர், பயிர்க்கடன், இலவச உரம் என அனைத்துவிதமான ஏற்பாடுகளும் தொடர்ந்து கிடைத்தால் தான் விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியும்.

ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நதிநீர் முழுமையாகவும், முறையாகவும் கிடைக்காத நிலையில் தமிழக அரசு நமது மாநில விவசாயத்தைக் காப்பாற்றவும், குடிநீருக்கும் தொடர் நடவடிக்கைகள் எடுத்து மாநில மக்கள் நலன் காக்கப் பாடுபட வேண்டும்.

மிக முக்கியமாக குறுவை சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். 

தற்போது தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 1 இலட்சம் ஏக்கரில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீரை இறவை செய்து குறுவை சாகுபடியை செய்ய விவசாயிகள் முயற்சி செய்கிறார்கள்.

தமிழக அரசு கடந்த சில வருடங்களாக குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்புத் திட்டம் அறிவித்து நிதியுதவி, பைப்பலைன் அமைப்பு, உரங்கள் என வழங்கியது பயனுள்ளதாக இருந்தது. அதே போன்று இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தொகுப்புத் திட்டம் மூலம் உதவிகள் செய்தால் விவசாயிகள் பயன் பெறுவார்கள், விவசாயமும் சரிவர நடைபெறும்.

எனவே தமிழக அரசு - இந்த ஆண்டாவது குறுவை சாகுபடி முழுமையாக நடைபெற விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கைகள் எடுத்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x