Published : 22 Jun 2019 03:10 PM
Last Updated : 22 Jun 2019 03:10 PM

எத்தனை காலம்தான் காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்குவது; உள்ளாட்சியில் தனித்துப் போட்டி: கே.என்.நேரு போர்க்கொடி

திமுக-காங்கிரஸ் கூட்டணியை முறிக்கும் வகையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போர்க்கொடி தூக்கியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்துக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துவரும் நிலையில் திருச்சியில் முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொதுமக்களுக்கு ஆதரவாக குடிநீர் பிரச்சினைக்கான போராட்டத்தில் பேட்டி அளித்த கே.என் நேரு திடீரென திமுக -காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் இன்று பேட்டி அளித்த திமுக மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு “காங்கிரஸை எத்தனை நாட்கள்தான் நாங்கள் தோளில் தூக்கி சுமப்பது? வேலை பார்த்த நாங்கள் என்ன வாயில் குச்சியை வைத்துக்கொண்டு போவதா? உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட தலைமையை வலியுறுத்துவோம்” எனப் பேசினார்.

இதற்கு முன்னர் மக்களவைத் தேர்தலில் திருச்சியில் திமுக போட்டியிட வேண்டும். அதற்கான அனைத்து பொறுப்புகளையும் தாம் ஏற்றுக்கொள்வதாக ஊழியர் கூட்டத்தில் கே.என்.நேரு பேசியிருந்தார்.

திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற இரண்டாவது எம்.பி. என பெருமை பெற்றார்.

கே.என்.நேருவின் செல்வாக்கும் திருநாவுக்கரசர் வெற்றிக்கு முக்கியக் காரணம் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் அதற்கு சமாதானம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x