Published : 06 Jun 2019 07:42 AM
Last Updated : 06 Jun 2019 07:42 AM

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 9 சதவீதம் அதிகரிப்பு: அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்து திருவள்ளூர் மாணவி சாதனை

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாணவர் முதலிடத்தையும், திருவள்ளூர் மாணவி 57-வது இடத் தையும் பிடித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் தேர்ச்சி 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

2019-20 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழு வதும் கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. ஃபானி புயலால் பாதிக் கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 20-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்கள் உட்பட நாடுமுழுவதும் 154 நகரங்களில் உள்ள 2,546 மையங் களில் தமிழ், ஆங்கிலம், இந்தி என 11 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 997 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழ் மொழியில் தேர்வு எழுத 31 ஆயிரத்து 239 பேர் விண்ணப்பித்தனர். இதில் தமிழகத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 78 பேர் உட்பட நாடு முழுவதும் 14 லட் சத்து 10 ஆயிரத்து 755 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வுக்கு விண்ணப் பித்திருந்த 6 திருநங்கைகளில் 5 பேர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்நிலையில், தேர்வு முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வை நடத் திய தேசிய தேர்வுகள் வாரியம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வெளி யிட்டது. 3 லட்சத்து 51 ஆயிரத்து 278 மாணவர்கள், 4 லட்சத்து 45 ஆயி ரத்து 761 மாணவிகள் மற்றும் 3 திருநங்கைகள் என மொத்தம் 7 லட்சத்து 97 ஆயிரத்து 42 பேர் (56.50 சதவீதம்) மருத்துவம் படிக்க தகுதிபெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 59 ஆயிரத்து 785 பேர் (48.57 சதவீதம்) தகுதி பெற்றனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 14.52 சதவீதம் அதிகமாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு 56.27 சதவீதமாக இருந்த தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 56.50 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 39.56 சதவீதமாக இருந்த தகுதிப் பெற்றவர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 9.01 சதவீதம் அதிகரித்து 48.57 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாணவர் முதலிடம்

நீட் தேர்வில் ராஜஸ்தான் மாநிலத் தைச் சேர்ந்த நலின் கந்தேல்வால் என்ற மாணவர் 720-க்கு 701 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். டெல்லி மாணவர் பவிக் பன்சால் 700 மதிப்பெண் எடுத்து இரண்டாவது இடமும், உத்திரபிரதேச மாணவர் அக்ஷத் கவுஷிக் 696 மதிப்பெண் எடுத்து மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர்.

அதிக மதிப்பெண் எடுத்த முதல் 50 பேரில் 43 மாணவர்கள், 7 மாணவிகள் இடம் பிடித்துள்ளனர். இந்த 50 பேர் அடங்கிய பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. தமிழகத்தின் திருவள்ளூரைச் சேர்ந்த சேர்ந்த மாணவி ஸ்ருதி 685 மதிப்பெண் எடுத்து அகில இந்திய அளவில் 57-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸில் 12-ம் வகுப்பு படித்தார்.

அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத் திறனாளிகள் பிரிவு மாணவர்களின் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த கே.கே. கார்வண்ண பிரபு 572 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

கட்-ஆஃப் மதிப்பெண்கள்

நீட் தேர்வில் தகுதிபெற்ற 7 லட் சத்து 97 ஆயிரத்து 42 பேருக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப் பட்டுள்ளன. பொதுப் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 701 முதல் 134 வரையிலான மதிப்பெண்களில் (50 பெர்சண்டையில்) 7 லட்சத்து 4 ஆயிரத்து 35 பேர் இடம்பெற்றுள்ளனர். ஓபிசி பிரிவில் 133 முதல் 107 வரையிலான மதிப்பெண்களில் (40 பெர்சண்டையில்) 63 ஆயிரத்து 789 பேரும், எஸ்சி பிரிவில் 133 முதல் 107 மதிப்பெண்களில் (40 பெர்சண்டையில்) 20 ஆயிரத்து 9 பேரும், எஸ்டி பிரிவில் 133 முதல் 107 வரையிலான மதிப்பெண்களில் (40 பெர்சண்டையில்) 8 ஆயிரத்து 455 பேரும் இடம்பெற்றனர்.

ஓபிசி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 119 முதல் 107 வரையிலான மதிப்பெண்களில் (45 பெர்சண்டையில்) 142 பேரும், எஸ்சி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 119 முதல் 107 வரையிலான மதிப்பெண்களில் (40 பெர்சண்டையில்) 32 பேரும், எஸ்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 119 முதல் 107 வரையிலான மதிப்பெண்களில் (40 பெர்சண்டையில்) 14 பேரும் இடம் பிடித்துள்ளனர்.

இந்த ஆண்டு முதலிடம் பிடித்த ராஜஸ்தான் மாணவர் நலின் கந்தேல்வால் 701 மதிப்பெண் எடுத் துள்ளார். இதனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x