Published : 20 Mar 2018 08:17 AM
Last Updated : 20 Mar 2018 08:17 AM

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக புகார்: நடிகர் தனுஷுக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததா?- தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக புகார் கூறி, நடிகர் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரியமனுவை, விசாரணைக்கு ஏற்பது குறித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என பல ஆண்டுகளாக உரிமை கோரி வருகின்றனர். இவர்கள் மகன் என்ற முறையில், தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷுக்கு உத்தரவிடக்கோரி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கதிரேசன் தம்பதி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் நடிகர் தனுஷ் மனுதாக்கல் செய்தார். இவரது மனுவை ஏற்று, மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தம்பதி தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கில் போலியான பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ரேஷன் கார்டு நகல்களை நடிகர் தனுஷ் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றி சாதகமாக உத்தரவு பெற்றதாகவும், இதனால் அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் கதிரேசன் தம்பதி உயர் நீதிமன்றக் கிளையில் புகார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ம் வகுப்பு சான்றிதழ், அரசிதழ், ஆதார் கார்டு, குடும்ப அட்டை அனைத்தும் போலியானது எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது தொடர்பாக நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்று விசாரணை நடைபெற்றது. மனுதாரர் வழக்கறிஞர் டைட்டஸ் வாதிடும்போது, ‘தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்து, நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்றார். இதையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்ற தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x