Published : 15 Mar 2018 09:13 AM
Last Updated : 15 Mar 2018 09:13 AM

காற்றழுத்த தாழ்வு வலுவிழக்க வாய்ப்பு: தென் தமிழகத்தில் மிக கனத்த மழை பெய்யும்

அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தென் தமிழகப் பகுதிகளில் இன்று மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

இதுதொடர்பாக அவர் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அரபிக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வியாழக் கிழமை முதல் படிப்படியாக தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலுவிழக்கக் கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். குமரிக் கடல் பகுதி யில் 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதனால் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு, கேரளக் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனத்த மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி, பாபநாசம்

புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக தூத்துக்குடியில் 20 செமீ, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 19 செமீ அளவு, மிக கனத்த மழை பதிவாகியுள்ளது.

மேலும், நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 10 செமீ, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், நெல்லை மாவட்டம் தென்காசியில் தலா 9 செமீ, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 8 செமீ, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, நாங்குநேரி, ஆயக்குடியில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x