Published : 20 Mar 2018 08:19 AM
Last Updated : 20 Mar 2018 08:19 AM
தமிழகத்தில் ஆன்மிக அரசியலே வெற்றி பெறும் என மன்னார்குடி சென்டலங்கார ஜீயர் சுவாமி தெரிவித்தார்.
சேலத்தில் தேசிய சேவா சமிதி சார்பில் மாதவம் என்ற புதிய சேவைக் கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், ராமகிருஷ்ண தபோவனம் சுத்தானந்த சுவாமி, சேலம் ராமகிருஷ்ண மடம் தலைவர் யதாத்மானந்த சுவாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
ஆர்எஸ்எஸ் அகில பாரத இணை பொதுச் செயலாளர் ஸ்ரீதத்தாத்ரேய ஹொசபாலே பேசும்போது, ‘சேலத்தில் 1939-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மக்களுக்கு கல்வி, மருத்துவம், ஆன்மிகம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இச்சேவையை விரிவுபடுத்தும் வகையில் தேசிய சேவா சமிதி சார்பில் மாதவம் என்ற புதிய சேவைக்கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது’ என்றார்.
விழாவில், மன்னார்குடி சென்டலங்கார ஜீயர் சுவாமி முன்னிலையில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர் ஜீயர் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திராவிடம் இந்து விரோதமல்ல
ஆண்டாளை விமர்சித்து பேசியதற்காக ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
பொறுமை கடலினும் பெரிது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்கும் வரையில் ஓய மாட்டோம், விட மாட்டோம். திராவிடம் என்பது இந்து விரோதம் அல்ல. சிலர் திராவிடம் என்ற பெயரில் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
கமலும், ரஜினியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். இதில் ஆன்மிக அரசியல் வெற்றி பெறும். இந்து விரோதப் போக்கை கடைபிடித்தால், அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் ஆன்மிக அரசியல்தான் வெற்றியை தரும்.
இவ்வாறு ஜீயர் சுவாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT